Friday, 23 April 2021

சிவபோகசாரம்

| No comment


சிவபோகசாரம்


 

1. அடிகள் வணக்கம்


சித்தி தருநாதன் தென்கமலை வாழ்நாதன்

பத்தி தருநாதன் பரநாதன் – முத்திப்

பெருநாதன் ஞானப் பிரகாசன் உண்மை

தருநாதன் நம்குருநா தன்.                                       1

                                                         

அருவும் உருவும் அருவுருவும் அல்லா

ஒருவ னுயிர்க்குயிரா யோங்கித் – திருவார்

கமலைவரு ஞானப்ர காசனென வந்தே

அமலபதந் தந்தெனையாண் டான்.                                          2


ஆரறிவார் நீதிவழி யாரறிவார் சித்திமுத்தி

ஆரறிவார் நற்றவங்கள் அன்பனைத்தும் – பாரெவர்க்கும்

கத்தன் கமலையில்வாழ் ஞானப்ர காசனெனும்

அத்தனென்போல் வந்திலனா னால்.                                    3


அரியயற்கு முன்னாள் அடிமுடியுங் காணாப்

பெரியவனே வந்து பிறந்து – துரியம்

பெருக்கின்றான் ஞானப் பிரகாச னாகி

இருக்கின்றா னாரூரில் இன்று.                                          4


கண்டேனிப் பாசங் கழிந்தேன் அமுதைமுகந்

துண்டேன் சுகானந்தத் துள்ளிருந்தேன் – வண்டிமிர்காத்

தேனைப் பொழிகமலைச் செங்கமலப் பொற்பாத

ஞானப்ர காசனையே நான்.                                             5


 

உள்ளிருந்தே யென்று முணர்ந்துகினும் கண்டிலரென்(று)

உள்ளும் புறம்புமா வோமென்று – மெள்ள

நரருருவாய் ஆரூரில் வந்தான் நமையாண்

டருள்புரிஞா னப்பிரகா சன்.                                            6

 


இருளுதய நீங்கும் இரவியைப்போல் என்னுள்

அருளுதய நன்றா யருளி – மருளுதய

மாற்றியவன் ஆரூரன் மாமறையும் ஆகமமுஞ்

சாற்றியஞா னப்பிரகா சன்.                                              7

        


ஒழியாத பேரின்பத் துள்ளாய் உலகில்

விழியா திருந்து விடவே – அழியாத

பூரணா செங்கமலப் பொற்பாதா தென்கமலை

ஆரணா நாயேற் கருள்.                                                 8

 


தேடுந் திரவியமும் சிற்றறிவும் பற்றுதலும்

கூடும்பொய் என்றருளிற் கூட்டினான் – நாடரிய

ஞானப்ர காசனுயர் நற்கமலை மானகர்வாழ்

வானப் பிறையணிந்த மன்.                                             9



காண்பதும்பொய் கேட்பதும்பொய் காரியம்போலேயிதமாய்ப்

பூண்வதும்பொய் எவ்விடத்தும் போகமும்பொய் மாண்பாகத்

தோற்றியின்ப வெள்ளமாய்த் துன்னிஎன்னுட் சம்பந்தன்

வீற்றிருப்ப தொன்றுமே மெய்.                                          10



2. பெறுதற் கருமை


ஒருமையுடன் ஈச ன ருள் ஒங்கிஎன்றுந் தூங்கல்

அருமை அருமை அருமை – பெருமை இடும்(பு)

ஆங்காரங் கோபம் அபிமானம் ஆசைவினை

நீங்காத போதுதா னே.                                                 11


 

தன்பெருமை யெண்ணாமை தற்போத மேயிறத்தல்

மின்பெருமை யாஞ்சகத்தை வேண்டாமை – தன்பால்

உடலைத் தினம்பழித்தல் ஒங்குசிவத் தோன்றல்

நடலைப் பிறப்பொழியு நாள்.                                           12


உரையிறந்தால் உன்னும் உணர்விறந்தால் மாயைத்

திரையிறந்தால் காண்கின்ற தேவை – வரைபெருக

வாசிப் பதுநாவால் வாழ்த்துவது நாடகமாய்ப்

பூசிப்ப தும்சுத்தப் பொய்.                                               13


 

பரம  ரகசியத்தை பாழான வாயால்

இரவுபகல் எந்நேர மின்றிக் – குரல்நெரியக்

கூப்பிட்டுங் காணுமோ கோழைமட நெஞ்சேமால்

பூப்பிட்டுங் காணாப் பொருள்.                                          14



ஒருகோடி ஆகமங்கள் எல்லாம் உணர்ந்தும்

பெருகுதவம் சித்தியெல்லாம் பெற்றும் – குருவருளால்

வைத்த படியிருக்க மாட்டாத மாந்தர்க்குச்

சித்த சல னம்மாந் தினம்.                                              15



அன்புமிக உண்டாய் அதிலே விவேகமுண்டாய்த்

துன்ப வினையைத் துடைப்பதுண்டாய் – இன்பம்

தரும்பூ ரணத்துக்கே தாகமுண்டாய் ஒடி

வருங்கா ரணர்க்குண்மை வை.                                          16




3. அறியும் பகுதி


உருவை அருவை ஒளியை வெளியை

இருளைச் சிவமென் றிராதே – மருளைப்

பிறிந்தறிவிற் கண்டதனைப் பின்னமற எங்குஞ்

செறிந்தபொருள் தானே சிவம்.                                          17



அகமாதி கண்ட அறிவாகி எங்குஞ்

சுகமாகி இன்ப சுகமாய்ச் – சுகாதீதத்

தானந்த வெள்ள மதுவாய்ச் சுகத்தைஅகன்

றானந்தம் ஆதியிலா தான்.                                             18



 

இந்தனந்தில் அங்கி எரிஉறுநீர் தேனிரதங்

கந்தமலர்ப் போதுவான் காலொளிகண் – சந்ததமும்

அத்துவித மாவதுபோல் ஆன்மாவும் ஈசனுமாய்

முத்தியிலே நிற்கும் முறை.                                              19



ஆறாறு தத்துவமும் ஆணவமும் நீங்கிஉயிர்

வேறாக நின்றஇடஞ் சொல்லின் – மாறா

இருளாய பாவனையிற் றெங்குமாய் நின்ற

பொருளேகாண் நீயே புணர்.                                            20


 

நனவாதி அந்தத்தில் நாடுசுகந் தன்னைக்

கனவாதி அந்தத்தில் கண்டு – நனவாதி

தோற்றிடும்போ தந்தச் சுகரூபங் கண்டவர்கள்

மாற்றிடுவர் என்றும் மலம்.                                             21



தத்துவங்கள் எண்ணித் தலையடித்துக் கொள்ளாதே

தத்துவங்கள் ஏதென்னின் சாற்றக்கேள் – மெத்துஞ்

சுகாரம்ப மாஞ்சிவத்தில் தோயாத மாயா

விகாரங்கள் தத்துவமா மே.                                             22


 

ஆறாறு தத்துவமும் ஆணவமும் வல்வினையும்

நிறாக முத்திநிலை நிற்போர்க்குப் – பேறாகப்

பார்விரித்த நூலெல்லாம் பார்த்தறியின் சித்தியிலே

ஒர்விருத்தப் பாதிபோ தும்.                                             23




4. உபதேச விளக்கம்


பரவிமனம் போகாப் பரத்தடைய நாளும்

இரவுபகல் அற்ற இடத்தே – திரமாக

நில்என்றான் கண்டஎல்லாம் நேதிபண்ணி மும்மலமும்

கொல்என்றான் ஞான குரு.                                             24

 


காயம் கரணமுதல் நான்கிற்குங் காரணந்தான்

ஆ யஇருள் மாயை அதுஎன்றால் – தூயபொருட்

போதனே ! செங்கமலப் பொற்பாத னே ! எனைநீ

ஏதேன்று சொல்லாய் இனி.                                              25

 

 

என்னை அறிவென்றான் என் அறிவில் ஆனந்தந்

தன்னைச் சிவமென்றான் சந்ததமும் – என்னைஉன்னிப்

பாரா மறைத்ததுவெ பாசமென்றான் இம்மூன்றும்

ஆராயந் தவர்முத்த ராம்.                                                       26

 


எங்கும் இருக்கும் அறிவுநீ ஏகமாய்

அங்கங் குணர்த்தும் அறிவுநாம் – பொங்கு

மலமறைத்தல் மாயை மயக்கல் விகாரப்

பலமனைத்தும் கன்மமலம் பார்.                                        27

 

 

செங்கமலப் பொற்பாதன் சீர்பாத வல்லவங்கள்

நங்கமலை வாழ்கிளியே ! நாடிக்கேள் – சங்கையிலாத்

தத்துவத்தைக் காட்டியதின் தத்துவத்தைக் காட்டிஅருள்

தத்துவத்தைக் காட்டியது தான்.                                         28


 

தேசு செறிகமலைச் செங்கமலப் பொற்பாதன்

பேசுதமிழ் ஞானப் பிரகாசன் – பாசவினை

வாட்டினான் மீட்டுநான் வாரா வகையருளைக்

காட்டினான் கூட்டினான் காண்.                                         29

 

நானிங்காய் நீயங்காய் நாட்டமற வைத்ததற்பின்

நானெங்கே நீயெங்கே நாதனே ! – வானெங்கும்

ஒன்றாகி நின்ற உணர்வுநீ உன்னறிவில்

நன்றாகத் தோன்றுசுகம் நாம்.                                           30

 

 

அலைவற் றிருந்த அறிவுநீ ஆங்கே

நிலைபெற் றிருந்தசுக ஞேயம் – மலைவற்

றிருந்ததுகண் டாயே இருந்தபடி அத்தோ(டு)

இருந்துவிடெப் போதும் இனி.                                          31

 

 

அகத்தை இழந்தருளாய் அவ்விடத்தே தோன்றுஞ்

சுகத்தில் அழுந்திவிடச் சொன்னான் – மகத்தான

சிற்பரனா ரூர்தனில்வாழ் செங்கமலப் பொற்பாத

தற்பரஞா னப்பிரகா சன்.                                                       32

 

 

கிட்டாத ஈசனுனைக் கிட்டி அருள்புரிந்த

நிட்டாநு பூதி நிலையிலே – முட்டா

திருவன்னி சேர்ந்துமாற் றேறியபொன் போல

வரும்இன்ப பூரணமா வை.                                             33

 


அநாதிசுக ரூபி அரனடிக்கீழ் என்றும்

அநாதி சுகரூபி ஆன்மா – அநாதி

இருந்தமலம் போக்கி இறைஅருளி னாலே

இருந்தபடி யேகண் டிரு.                                                        34

 


இற்றை வரைக்கர ணத்தோ டிணங்கினையே

இற்றைவரைச் சென்மம் எடுத்தனையே – இற்றைவரைத்

துன்பவெள்ளத் துள்ளே துளைந்தனையே யீதறநல்

இன்பவெள்ளத் துள்ளே இரு.                                           35

 

 

தேகாதி நானல்ல என்றறிந்தால் சித்தமயல்

போகாத தென்னையோ புண்ணியா – தேகாதி

தன்னளவே அம்மயக்கம் சத்தியமாய் எப்பொழுதும்

உன்னளவே இல்லை உணர்.                                            36

 


ஆறாறு தத்துவநீ அன்றென் றறிந்தனையே

ஆறாறும் கண்டறிவன் ஆயினையே – மாறாமல்

உன்னறிவில் ஆனந்தத் தோங்கினையே ஒராமல்

நின்னறிவை விட்டதுவாய் நில்.                                         37

 

 

மாதா பிதாச்சுற்றம் என்று மயங்கினையே

நீதான் தனுவாகி நின்றனையே – ஈதெல்லாம்

பொய்யென் றறிந்தனையே பூரணா னந்தவெள்ளம்

மெய்யென் றறிந்தனையே மெய்.                                                38

 

 

மனையில்வரு போகத்தின் மாதர்மக்கள் பாச

வினையில் அழுந்திவிடாதே – உனைஇழந்து

காணாமற் கண்டானைக் காட்சி யறக்கலந்து

பூணாமல் எப்பொழுதும் பூண்.                                          39

 

 

சுத்தவத்தை நாடியிடுஞ் சுத்த இராப்பகலா

மெத்தவத்தை நாடி விடுவையேல் – சுத்தவத்தை

தானாய் இரண்டுந் தவிர்த்த சிவானந்த

வானாவை நீயே மதி.                                                  40

 


சுத்தநிலம் உன்றனக்குச் சொல்லக்கேள் தொல்லைவினைத்

தத்துவங்கள் ஆறாறுந் தாம்பெருக் – கத்திடுவர்

எல்லாம் இழந்த இடமே அதுவாக

நில்லாய் அதுவே நிலை.                                                        41

 


நெருப்பென்றால் வாய்சுடுமோ நெய்பால்தேன் கட்டி

கருப்பென்றால் தித்தியா காணீ – விருப்பமுடன்

நீபிரமம் என்றக்கால் நீபிரமம் ஆயினையோ

நீபிரமம் சற்குருவால் நில்.                                              42

 


ஆர்க்குந் தெரியாத ஆனந்த இன்பவெள்ளம்

மேற்கொண்டு கொண்டு விடுகுதில்லை – யார்க்கும்

தெரியாப் பரப்பிரமஞ் சேர்த்தாய் உனக்குச்

சரியார் சிதம்பரநா தா.                                                 43

 


 

5. அநுபூதி நிலை

 

உள்ளங் கரைய உடல்கரைய ஆனந்த

வெள்ளங் கரைபுரண்டு மேலாகக் – கள்ளமலம்

பொய்யாக என்னுட் புகுந்தவா றென்கொலோ

ஐயா தியாகவினோ தா.                                                        44

 

 


எதேது செய்தாலும் எதேது சொன்னாலும்

எதேது சிந்தித் திருந்தாலும் – மாதேவா

நின்செயலே என்று நினதருளா லேஉணரில்

என்செயலே காண்கிலே னே.                                           45

 


மாயைமலம் எங்கே மறைந்ததோ ! மாயைதனில்

ஆயசகம் எங்கே அழிந்ததோ ! – காயமதில்

தங்கும் புருடனெங்கோ ! சச்சிதா னந்தவெள்ள்ம்

எங்கு மிகக்கோத்த தே.                                                46

 


நானுஞ் சுகவடிவாய் நண்ணினேன் நின்னருளால்

வானுஞ் சுகவடிவாய் மன்னிற்றே – வானுஞ்

சுகரூப மன்றுமணந் தோற்றநிலம் போலுன்

அகரூப மட்டே அது.                                                   47

 


ஈசன் அடியில் இருக்கையிலே எங்கெங்கும்

ஈசனடி தேடி இளைத்தேனே – பேசரிய

பொற்பதத்தன் செங்கமலப் பொற்பாதன் தன்னுடைய

நற்பதத்தைக் காணாமுன் நான்.                                         48

 


நற்பதஞ்சேர் ஆரூரின் ஞானப்ர காசனெந்தை

தற்பரனோர் ஞானவாள் தந்தானே – சொற்பனத்தும்

காரார் மறலிஅயன் கண்ணனுக்கும் அஞ்சேனை

யாராலும் என்செய்ய லாம்.                                             49

 


வெறும்பாழிற் பேரின்ப வெட்டவெளி தன்னில்

குறும்பாளர் காணாக் குடிலின் – உறும்பாசம்

ஒட்டிஎனை வைத்தனனே உற்றபிர பஞ்சமெலாம்

ஆட்டியஞா னப்பிரகா சன்.                                             50

 


என்றுஞ் சிவத்தோ டிணைபிரியா தேயறிவாய்

நின்றபடி தன்னை நிகழ்த்தினான் – மன்றில்

நடமாடும் ஆரூரன் ஞானப்ர காசன்

திடமாக என்னுள்ளத் தில்.                                              51

 


நாதனார் தென்கமலை நாயனார் எவ்வுயிர்க்கும்

போதனார் செங்கமலப் பொற்பாதர் – பேதமற

ஒன்றிரண்டு தானறவே உண்மையிலே கூட்டிஎனை

இன்றறவே வைத்துவிட்டா ரே.                                         52

 


நன்னெஞ்சே நீகேட்ட நன்மையெல்லாஞ் சொல்லுதற்குக்

கன்னெஞ்ச மாலயனுங் காணாதோன் – வன்னெஞ்சர்

இன்னகுறை உண்டென்னா ஈசன் எதிர்வந்தான்

என்னகுறை சொல்லாய் இனி.                                           53

 


இட்டசனம் எங்கே இதமகிதந் தானெங்கே

துட்டசனம் எங்கே தொழிலெங்கே – சிட்டருடன்

கூடி யிருந்ததெங்கே குன்றாச் சிவானந்தம்

நாடியது வாயிருந்த நாள்.                                              54

 


வாக்குமனக் காயத்தான் வந்தபொருள் அத்தனையும்

வாக்குமனக் காயமுடன் மாயுமே – வாக்குமனக்

காயம் உடனிழந்து காண்ஞா திருஞான

ஞேயம் இழந்த நிலை.                                                  55

 


புசிப்போம் சிவபோகம் பூரணாமாய் எங்கும்

வசிப்போம் உலகில் வசியோம் – முசிப்பின்றி

வாழ்வோஞ் சிவத்தையுணர் மாதவர்தம் பொன்னடிக்கீழ்த்

தாழ்வோம் எமக்கார் சரி.                                               56

 


6. உபாய நிலை

 

அறிவுநீ என்ன அறிந்தறிந்து மாயைச்

செறிவுநான் என்றென்று சேர்ந்தால் – அறிவு

தெரிந்திடுமோ இன்பசுகஞ் சேர்ந்திடுமோ நின்னைப்

பிரிந்திடுமோ சென்மப் பிணி.                                           57

 

 

அரணங்கள் தாம்எரித்த அத்தரே என்னுள்

கரணங்கள் ஒட்டும்வகை காட்டீர் – கரணங்கள்

நீஅதுவாய் நில்லாமல் நின்னறிவைக் கண்டருளிற்

போயதுவாய் நின்றுவிடப் போம்.                                               58


தானல்லா தத்தனைய்ந் தானென் றுழலாமல்

தானெல்லா மாயதனுள் தாக்காமல் – தானெல்லாம்

ஆனோம் எனும்போதந் தாக்காமல் ஈசனிடத்(து)

ஆனோனே ஆயினவ னாம்.                                           59

 


தேகநாம் என்றென்றூ செஉபுவீர் ஈதில்வரும்

போகநாம் என்று புலம்புவீர் – நோக

வருந்துவீர் தீவினையின் மாறாத இன்பம்

பொருந்துவீர் எப்படிநீர் போய்.                                         60


தன்னை இழந்திடத்தே தானே சுகவடிவாய்

இன்னபடி என்றறியா எங்கோனுட் – பின்னமற

நின்றநிலை தானுந் தெரியாதே நின்றவர்கட்(கு)

அன்றோ பிறப்பறுக்க லாம்.                                             61

 

உன்னாதே பற்றா துரையாதே யொன்றி அதில்

நின்னாமம் இல்லை நிகழாதே – பன்னாட்

பரையிறந்து நிற்கும் பயனணைந்தார் நெஞ்சில்

திரையிறந்து நிற்கும் சிவம்.                                             62


அருளறிந்து தானாம் அறிவறிந்தே ஆங்குட்

பொருளறிந்து தானடங்கிப் போத – இருளகல

விம்மா திருந்து விகற்பமற ஒன்றாகிச்

சும்மா இருக்கை சுகம்.                                                  63

 


செறியுந் தனுவாதி சேர்ந்தறிந்து நின்ற

அறிவை அறிவால் அறிந்தே – அறிவிழந்து

நின்றால் சுகானந்த நீடு நிலைவேறு

சென்றால் சுகங்கிடையா தே.                                            64

 

தத்துவத்தை விட்டருளிற் றான்கலந்து தன்னிழப்பின்

மெத்துஞ் சுகத்தின் மிகஅழுந்திச் – சுத்தமாய்

ஒன்றாகி நின்ற உணர்வும் ஒழிந்தக்கால்

அன்றோ சிவபோக மாம்.                                              65

 


சுட்டறிவு கெட்ட சுகாதீத உண்மையிலே

விட்டகலா தென்றும் விரவுவோர் – இட்டமுடன்

யோக சமாதிகளும் உட்புறம்பாம் பூசைகளும்

ஆக நினையார் அவர்.                                                 66

 


நின்னறிவில் யானொளித்து நீயாகி நின்றதுபோல்

என்னறிவில் நீயொளித்தே யானாகி – எந்நாளும்

நிற்கவல்லை யாமாகில் நின்சனனம் போக்குதற்குக்

கற்கவல்ல தேதுமில்லை காண்.                                          67

 


இன்பசுகத் துள்ளே இருக்கலாம் எப்போதும்

துன்பவினை உன்னைத் தொடராது – வன்பா

மருட்டேக மாயடங்கி மாயாமல் நெஞ்சே

அருட்டேக மாயடங்கு வாய்.                                           68


தேக மறந்து திருவருளாய் நின்றுசிவ

போகம் விளையப் புணர்நெஞ்சே – நோக

வருந்தாமல் தீவினையின் வாடாமல் துன்பம்

அருந்தாமல் நீபிறவா மல்.                                              69

 


பூதாதி பாசமன்றோ பூரணா னந்தமன்றோ

பேதமற நம்முட் பிரானன்றோ – வாதனைகள்

விட்டால் சுகமன்றோ என்றுணர்வில் வேண்டுவதுங்

கெட்டால் பிறப்பும் கெடும்.                                             70

 


அழுந்தாதே பாசத் தனுதினமும் ஐயோ

விழுந்தால் எழுந்திருக்க வேண்டும் – செழும்பாகை

மீறித் தருமிரத வீட்டின்ப மாமலைமேல்

ஏறித் திரும்பலா மே.                                                   71

 


என்றுஞ் சனனத் திடர்க்கடலி லேமூழ்கிப்

பொன்றுமன மேஉனக்கோர் புத்திகேள் – நன்று

தனிச்சங்கஞ் சேராமல் தற்பரனைச் சேரில்

இனிச்சங்கஞ் சேரா திரு.                                                        72

 


7. பணியறுத்தல்

 

அவரவருக் குள்ளபடி ஈசனரு ளாலே

அவரவரைக் கொண்டியற்று மானால் – அவரவரை

நல்லார்பொல் லாரென்று நாடுவதென் நெஞ்சமே

எல்லாம் சிவன்செயலென் றெண்.                                                73

 


எங்கே நடத்துமோ எங்கே கிடத்துமோ

எங்கே இருத்துமோ என்றறியேன் – கங்கைமதி

சூடினான் தில்லையிலே தொந்தொமென நின்றுநடம்

ஆடினான் எங்கோன் அருள்.                                           74

 


போகம் புவனம் பொருந்துமிடம் எங்கெங்கும்

தேகம் கரணந் திரியுமே – யாகிலது

தன்னைநீ யென்று தவியாதே நெஞ்சமே

நின்னையே கண்டருளில் நில்.                                          75


எதேது செய்திடினும் எதேது பேசிடினும்

எதேது சிந்தித் திருந்திடினும் – மாதேவன்

காட்டிடுவ தானவருட் கண்ணைவிட்டு நீங்காது

நாட்டம் அதுவாய் நட.                                                 76


எடுத்தஉடற் கேய்ந்தகன்மம் எப்போதும் ஊட்டும்

விடுத்துவிட்டோம் என்பர் விழலர் – விடுத்த

ததுவன்றோ ஐந்துமலம் ஆறாறும் நீத்த

இதுவன்றோ யாம் துறவென் பேம்.                                     77

 

எவ்வுயிருங் காக்கவோர் ஈசனுண்டோ இல்லையோ

அவ்வுயிரில் நாமொருவர் அல்லவோ – வவ்விப்

பொருகுவதும் நெஞ்சே புழுங்குவதும் வேண்டாம்

வருகுவதும் தானே வரும்.                                             78

 

முப்பதுஞ்சென் றால்விடியும் முப்பதுசென் றாலிருளும்

அப்படியே ஏதும் அறிநெஞ்சே – எப்பொழுதும்

ஆங்காலம் எவ்வினையும் ஆகும் அதுதொலைந்து

போங்காலம் எவ்வினையும் போம்.                                     79



ஆவலுற்றி டுஞ்சகலத் தாவதுவும் ஆங்கவரே

கேவலத்தின் மூழ்கிக் கிடப்பதுவும் – நாஅரற்றல்

இல்லாத சுத்தத் திருப்பதுவும் இம்மூன்றும்

இல்லான் செயலென் றிரு.                                              80


பாசஞ் சடமுயிரோ தானாகப் பற்றறியா

ஈசன் இரண்டும் இணைத்தாட்டிப் – பூசலென்றுஞ்

செய்பவனே தானே திரும்பிஅருள் செய்யாமல்

உய்பவர்கள் உண்டோ உரை.                                           81



முற்றின்ப மாமருளின் மூழ்குவதும் மோகமிகு

சிற்றின்ப மாமருளிற் சேர்குவதும் – உற்றிங்(கு)

அறிந்தானன் நெஞ்சே அகிலாண்ட மெங்குஞ்

செறிந்தான் செயலே தெளி.                                             82


என்னிடத்தில் நின்செயலே இல்லையென்றால் யாதுறினும்

நின்னிடத்தில் யான்வேண்டல் நிச்சயமே – என்னிடத்தில்

இன்மை உயிர்க்குயிர்நீ யின்மை இருந்தியற்றின்

நன்மைதின்மைக் கேதுவோ நான்.                                              83


நாம்பெரியர் என்னுமதை நாடா தடக்குமவர்

தாம்பெரியர் என்றுமறை சாற்றியிடும் – நாம்பெரியர்

என்பார் சிறியர் இவரலா லிவ்வுலகில்

துன்பார் சுமப்பார்கள் சொல்.                                            84

 


கட்டமாங் காயம் கலையனைத்தும் கற்றாலும்

அட்டமா சித்தி அடைந்தாலும் – இட்டம்

பரம சுகமே பதியாத போது

திரம சுகமே தெளி.                                                     85

 

மனவாக்குக் காயமுயிர் மன்னியசைப் பானும்

அனமாதி போகமளிப் பானும் – நனவாதி

கூட்டிவிடு வானுமுத்தி கூட்டிடுவா னும்பிறப்பில்

ஆட்டிவிடு வானும் அரன்.                                             86

 

முன்னைவினைக் கீடா முதல்வன் அருள்நமைக்கொண்

டென்னவினை செய்ய இயற்றுமோ – இன்னவினை

செய்வோம் தவிர்போம் திரிவோம் இருப்போம்இங்(கு)

உய்வோம் எனும்வகையே து.                                           87


ஊட்டும் வினையிருந்தால் உன்னொணை உன்பதத்தைப்

பூட்டிப் பிடித்துப் புசிப்பிக்கும் – கேட்டுத்

திரியாதே வந்துதில்லைத் தெய்வமே என்றென்(று)

எரியாதே நெஞ்சே இரு.                                                        88


என்னதன்று நிசெயலே என்றறிந்தால் யான்விரும்பி

என்னவென்று வாய்திறப்பேன் ஈசனே – இன்னம்இன்னம்

எப்படியோ நாயேனை ஈடேற்ற வேண்டும்உனக்(கு)

அப்படியே செய்தருளு வாய்.                                           89

 

வன்மைபுரி காய மரப்பாவை தன்னைஅரன்

கன்மமெனுஞ் சூத்திரத்தால் கட்டியே – நன்மைதின்மை

ஆட்டுவது நாட தறிவிலார் தஞ்செயலாய்

நாட்டுதல்போல் உண்டோ நகை.                                     90

Tags :

No comments:

Post a Comment